புத்தகங்களுடனான அந்தச் சிறுவனின் உறவு தினப்பத்திரிக்கையில்தான் துவங்கியது. வீட்டிற்கு தவறாமல் வரும் தினத்தந்தியில் எழுத்துக்கூட்டிப் படிக்கத் துவங்கிய பருவத்தில் கன்னிதீவின் வழியாக அவனது பால்ய கற்பனைகள் தனக்கான பாதைகளைக் கண்டடைந்தது. இப்போது தினத்தந்தியில் கன்னிதீவு மட்டும்தான் வருகிறது. முன்பெல்லாம் இரண்டாம் பக்கத்தில் கன்னித்தீவும், மூன்றாம் பக்கத்தில் மற்றொரு படக்கதையும் வரும். மூன்றாம் பக்கத்தில் வரும் படக்கதை சரியாக 100 வது நாள் அன்று நிறைவடைந்துவிடும்.பின்னர் புதுக்கதை துவங்கும். ஜேம்ஸ்பாண்ட், துப்பறியும் சங்கர்லால் எனப் பலரும் அவனுக்கு நண்பர்களாக அறிமுகமானது தந்தியின் மூன்றாம் பக்கத்தில்தான். அறிமுகமான சில நாட்களுக்குத்தான் மூன்றாம் மனிதர்களாய்,நண்பர்களாய் இருப்பார்கள்,பின் வரும் நாட்களில் நான்தான் ஜேம்ஸ்பாண்ட் என்ற சுய உணர்விற்கு வந்துவிடுவான். ஜேம்ஸ்பாண்ட் உடம்பில் சட்டையில்லாமல் அரைக்கால் டிராயரோடு புதுக்கோட்டையின் தெருக்களில் சாகசம் புரிந்துகொண்டு இருப்பார்.
ஜேம்ஸ்பாண்ட் வளரத்துவங்கிய பருவத்தில் தினத்தந்தியின் அன்றைய கருப்பு வெள்ளை ஞாயிறுமலரில் ரமணி சந்திரனோ, லக்ஷ்மியோ அல்லது அனுராதா ரமணனோ கதை எழுதிக்கொண்டு இருப்பார்கள். மெல்ல ஜேம்ஸ்பாண்ட் தனது சாகசங்களைக் குறைத்துக்கொண்டு சமூக விரும்பியாக மாறிவிட்டார். பெண்களின் வேதனைகளும்,கொடுமைகளும் தீர ஒரே தீர்வு ரமணி சந்திரனை அல்லது அனுராதா ரமணனை முதல்வராக்குவதுதான், இதுதான் ஒரே வழி என்று தீர்க்கமாக முடிவெடுத்து இதுகுறித்து தனது தலைவர் கலைஞர் அவர்களுடன் கருத்துரையாடுவது என்ற முடிவிலும் இருந்தார். துரதிஷ்டவசமாக அன்றைய காலகட்டத்தில் தலைவர் கலைஞர் புதுக்கோட்டைப் பக்கம் வராமல் இருந்ததால் சந்திக்க இயலாமல் போனது. பின்னர் சந்திக்கும் வாய்ப்பு வந்த காலத்தில் சமூகவிரும்பி நிலையில் இருந்து அரசியல் ஆர்வலர் நிலைக்கு உயர்ந்துவிட்டதால் கருத்துரையாடும் திட்டத்தைக் கைவிட்டார்.
அரசியல் ஆர்வலர் என்ற நிலைக்கு உயர்ந்ததும் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்த கதையாக அவருக்கு தினத்தந்தி பிடிக்காமல் போனது. எல்லாக் கட்சி செய்தியோடும் அவன் கட்சி செய்தியையும் வெளியிடும் தினத்தந்தியைவிட திராவிட இனத்தின் போர்வாளாம் முரசொலிதான் மந்திரமாக மாறிப்போனது. அன்றைய கலைஞருக்கு கட்சிமேல் ராஜீவ் கொலைப்பழி, கோபால்சாமியின் துரோகம், செல்வி.ஜெயலலிதாவின் ஹிட்லர் காலப்பேயாட்டம் இப்படியெல்லாம் நெருக்குதல் இருந்தாலும் இவற்றுக்கும் மத்தியில் தான் படித்த நல்ல இலக்கிய நூல்களை, பெரியார்,அண்ணா எழுதிய இன உணர்வு நூல்களை தன் கொஞ்சு தமிழில் ஒவ்வோரு வாரமும் அறிமுகம் செய்வார். அதைப் படித்ததும் உள்ளூர் நூலகம் சென்று அவற்றை அன்றே படித்து தீர்ப்பது அவனது வாடிக்கையானது. கலைஞரின் அறிமுக நூல்களுக்காக நூலகம் சென்றதில் வேறு நல்ல புத்தகங்களும் கண்ணில்பட அவனது பள்ளி இறுதி மற்றும் கல்லூரிக்கால ஓய்வு நேரம் முழுவதும் நூலகங்களிலேயே சென்றது. சற்றே திரும்பிப் பார்த்தபோது தங்கள் ஓய்வு நேரங்களைப் பயனுள்ள வழியில்செலவழித்த அவனது நண்பர்கள் ஒவ்வோரு பிகரோடும் செட்டிலாயி சுற்றிக்கொண்டு இருப்பது கண்டு தன் டீன்ஏஜ் பருவத்தை திசை திருப்பிய தலைவர் கலைஞர் மேல் அவனுக்கு முதல்முறையாக சிறிது கோபம் வந்தது.
மேற்படிப்பிற்காக சென்னை வந்த இடத்தில் அவனைப்போலவே ஒரு புத்தக்கிறுக்கன் அறிமுகமானான். அவன்பெயர் நா.முத்துக்குமார். ஒருநாள் முத்துக்குமார் அவனை அழைத்து தன்னுடைய ஓட்டை சைக்கிளின் பின்புறம் அமரவைத்து மூச்சுவாங்க டபுள்ஸ் அடித்து அழைத்துச்சென்ற இடம் சென்னையில் வருடம்தோறும் நடக்கும் புத்தகச்சந்தை. அப்போது காகிதேமில்லத் கல்லூரியில்தான் புத்தகச்சந்தை நடந்துவந்தது. இப்போதுபோல அத்தனை பிரம்மாண்டம் இல்லை. ஆனால் அவன் சென்று வந்த நூலகங்களைவிட மிகப்பெரியது. அன்றைக்கு பார்க்கும் புத்தகங்களை எல்லாம் வாங்கும் அளவிற்கு வசதியில்லாததால் அவன் ஏக்கப் பெருமூச்சின் சூட்டில் அங்கிருந்த புத்தகங்களின் பக்கங்கள் மேலும் மொடமொடப்பானது.
அதிகம் உழைக்க வேண்டும்,மேலும் மேலும் உழைக்க வேண்டும், அதிதீவிரமாக உழைக்க வேண்டும். பார்க்கும் புத்தகங்களை எல்லாம் வாங்க வேண்டும் என்ற அவனது ஏக்கக் கனவுதான் அவனது இன்றைய வாழ்க்கையை உயர்த்தியிருக்கிறது என்பதால் புத்தச்சந்தைமேல் அவனுக்கு இன்றும்,என்றும் நன்றியுணர்ச்சி உண்டு. எல்லாவற்றிற்கும்போல் வாழ்க்கைக்கென்றும் ஒரு வாசம் இருக்கிறதா? புதுபுத்தகங்களை வாசிக்கப் பிரிக்கும் போது அதில் இருந்து கிளம்பும் வாசம்தான் வாழ்க்கையின் வாசம் என்பதை இப்போது உணர முடிகிறது.




