அப்பா என்றாலும் அன்பு



நானும் சங்கரனும் ஒருவருக்கொருவர் பெயர் சொல்லி அழைப்பதை விடுத்து மாப்ளை என்று பரஸ்பரம் அழைக்கத் துவங்கியபோது நாங்கள் ஆறாம் வகுப்பில் நுழைந்து இருந்தோம்..கழுத்தில் கட்டிக்க டை,காலில் போட்டுக்கொள்ள ஷூ இதையெல்லாம் விடுங்கள்...சீருடை கூட இல்லாத பஞ்சாயத்துப் பள்ளி எங்கள் பள்ளி. நாட்டுச் சீமை ஓடு வேயப்பட்ட நீளமான கட்டிடம்.உத்திரத்தில் இருந்து அவ்வப்போது விழுந்து பரபரப்பைக் கிளப்பும் மழைத் துளி, சில சமயங்களில் தேளும்கூட. நாங்கள் உட்கார பெஞ்செல்லாம் கிடையாது.ஒன்லி தரைதான். நடுவில் பாதைவிட்டு மாணவர்களும் மாணவியரும் இரு பகுதிகளில் ஐய்ந்தைந்து பேர் வருசையாக மொத்தம் ஆறு வரிசைகளில் பிரித்து அமர்ந்திருப்பர்.


ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு மாறும்போது நானும் சங்கரனும் ஆறாம் வரிசையில் சுவற்றின் ஓரமாக அமர வைக்கப்பட்டோம்.. வகுப்பு துவங்கியதில் இருந்து சங்கரன் ஒன்னுமே எழுதலை. ‘ஏன்டா எழுதாம இருக்க?’ என்று நான் கேட்டபோது பதில் சொல்லாத சங்கரன் ரங்கநாதன்சார் கேட்டப்ப போர்டு லேசா மங்கலா இருக்குது சார் அப்பிடின்னான். அவனை முன்னாடி வரச் சொன்ன சார் இங்கேந்து தெரியுதான்னு கேட்க, நல்லாத் தெரியுது சார்னு சொல்லி சடார் என அங்கேயே அதாவது முதல் வரிசையில் மாணவ,மாணவியரைப் பிரிக்கும் பாதையின் ஓரத்தில் அமர்ந்து விட்டான். என்னாச்சு அவனுக்கு என்ற குழப்பத்திலும்,பதட்டத்திலும் நான் இருக்க, லேசாக பின்னால் திரும்பி என்னை நக்கலாகப் பார்த்து ஒரு குறுஞ் சிரிப்பொன்று உதிர்த்தான்.

அடுத்த நாள் மாலை நான் அவனிடம் ’ஏன்டா கண்ணு சரியா தெரியலைன்னு சார்கிட்ட சொன்னியே! வீட்டுல சொல்லி கண் டாக்டரைப் பாத்தீங்களாடான்னு’ கேட்க, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு "கண்ணெல்லாம் நல்லாத்தான் தெரியுது.ஆனா அங்க ஒக்காந்தாத்தான் சிவகாமசுந்தரி புள்ளகிட்ட பேசமுடியும்"அப்படின்னான். எனக்குத் தெரிந்து என் செட்டில் விஞ்ஞானப்பூர்வமாக சைட் அடித்த முதல் நபர் அவன்தான். வருடம் மாறமாற அவன் சைட் அடிக்கும் பெண்களும் மாறிக்கொண்டே இருந்தார்கள்.ஆனால் அவன் மட்டும் சைட் அடிப்பதில் இருந்து மாறவேயில்லை.

எட்டில் இருந்து ஒன்பதாம் வகுப்பு மாறும் நாளை அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்தோம்..காரணம் அதுதான் பள்ளியில் எல்லோரும் டவுசரில் இருந்து ஃபேண்ட்டுக்கு மாறும் நாள். ஃபேண்டு போட்டதும் எல்லோரும் பெரிய மனுசங்களாக மகிழ்வாக உணர்ந்தோம்.அந்த ஆண்டிலேயே மற்ற அனைவரையும்விட சங்கரனுக்கு சீக்கிரமே ஒரு புரோமோஷன் கிடைத்தது.அது...மீசை.

எங்க எல்லாருக்கும் எட்டிக்கூடப் பார்க்காத அந்த நேரத்தில் சங்கரன் சனியனுக்கு மட்டும் மீசை நல்லாவே வரத் துவங்கியது. பத்தாம் வகுப்பில் நாங்கள் படித்தபோது அனைவரையும் அடிக்கும் சுப்ரமணியன் சார் அவனை மட்டும் அடிக்காமல் இருந்ததற்கு அவன் மீசைகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.எந்தப் பெண்ணையாவது பார்த்தால் தன் இடக்கையால் அதை ஸ்டைலாக நீவிவிட்டுக்கொள்வது அவனது அந்நாள் மேனரிசமானது.

பத்தாம் வகுப்பில் ஒரு ஆவணி அவிட்டத்திற்கு முந்தைய நாள் சங்கரன் என்னிடம் "மாப்ளே! நாளைக்கு எனக்கு பூணுல் கல்யாணம்.கிளாஸ்ல யாருகிட்டயும் நான் சொல்லலை.நீ அவசியம் வந்துருடா".

"பூணூல் கல்யாணம்னா என்னடா?"

"அது வேற ஒண்ணுமில்லை.மொதமொதல்ல எங்களுக்கு பூணூல் மாட்டுறதை பூணுல் கல்யாணம்பாங்க".

"ஒனக்காவது பரவாயில்லைடா.மாட்டுற வேலை. எங்களுக்கு சுன்னத் கல்யாணம்னு ஒன்னு பண்ணுவாய்ங்க.அது எடுக்குற வேலை. உசுரு போகும்" என்ற என்னை பார்த்து சிரித்துக்கொண்டே சென்றான்.

காலை பத்துமணி நிகழ்ச்சிக்கு நான் எட்டு மணிக்கே சங்கரன் வீட்டிற்குச் சென்று விட்டேன்.அண்ணன் வெகு குஜாலாக இருந்ததைக் கண்டு ஃபங்ஷன்னால ஜாலியா இருக்கான்போல என நினைத்தேன். குஜாலுக்கு காரணம் அதுவல்ல..அவன் உறவினர் பெண் காயத்ரி என்று சிறிது நிமிடத்திலேயே புரிந்துவிட்டது. அவள் இருக்கும் பக்கமாகவே இவன் செல்வதும் இருவரும் லுக் விடுவதும் என்னை மட்டும் சாட்சியாக வைத்து நடந்து கொண்டிருந்தது. ஒரு தூண் மறைப்பில் இருந்து அவள் இவனை கைகாட்டி அழைக்க குஷியாக சென்றவன் சற்றே வாடிய முகத்தோடு உடனே திரும்பினான்.

"என்னடா மாப்ள? என்ன சொன்னா?"

"என் மீசை ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னாடா"

"அதையேன் வருத்தமாச் சொல்லுற?"

"இல்லைடா பூணூல் போடுறதுக்கு முன்னாடி அதை வழிச்சு விட்டுருவாங்கடா" என்றவன் மேற்றொண்டு எதுவும் பேசாமல் உள்ளே போய்விட்டான்.அப்பொழுதே அவன் கண்கள் கலங்கத் துவங்கியது நன்றாகவே தெரிந்தது. அவனுக்கு மீசை எடுக்கும் அந்த நேரமும் வந்தது.மீசையை எடுக்க வேண்டாம் என்று அவன் அப்பாவிடம் அவன் போராட அவரோ "உனக்காவது பரவாயில்லை மீசையை மட்டும்தான் எடுக்குறாங்க. எனக்கெல்லாம் பூணூல் போட்ட அந்தக் காலத்துல தலையிலே முன்பக்கம் பாதி முடியையும் சேர்த்தே எடுத்துருவாங்க.பேசாம உக்காருடா" என்றார்.

மீசைமேல் நாவிதர் கத்தியை வைத்த அந்த நேரத்தில் அழவே துவங்கிவிட்டான்.

"டேய்!என்டா அழற? ஒரு ஆம்பளைப் பையன் அவனோட தோப்பனார் செத்து கொள்ளி வைக்கிறச்ச மீசை எடுப்பால்ல...அப்போ மட்டுந்தான் அழணும்.இப்போ அழப்படாது" என்ற அவனது அப்பாவின் குரல்கேட்டு எங்கேதான் சென்றதோ அதுவரை இருந்த அவனது கண்ணீர்?

பின்னர் இளநிலை பட்டப் படிப்பு முடித்து முதுகலைப் படிப்பிற்காக நான் சென்னை வந்தபோது சங்கரனும் சென்னைக்கு வேலை கிடைத்து வந்து விட்டான். ஒருநாள் இருவரும் திருவல்லிக்கேணி ரத்னா கஃபே அருகில் டூவீலரில் செல்லும்போது குறுக்கே பாய்ந்த நாயால் கீழே விழ, இருவருக்குமே சமமான அடி. வலியால் என் கண்களில் இருந்து நீர் கொட்ட, சங்கரனைப் பார்க்கிறேன்.அத்தனை வலியிலும் அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. எனக்கு தெரிந்து அவன் பூணூல் கல்யாணத்தின் போது அழுததை தவிர வேறெப்போதும் அழுது பார்த்ததேயில்லை.

இன்று காலையில் சங்கரன் போன் செய்திருந்தான். குரல் கொஞ்சம் கம்மியிருக்க," என்னடா சங்கரா..?" என்றேன் "அப்பா போயிட்டாரு வந்திருன்னுட்டு" போனை வச்சிட்டான். எனக்கு தூக்கிவாரி போட்டுச்சு. நேத்து கூட போனில பேசினேன். என்ன ஆயிற்று? என்று கேட்பதற்குள் போனை வைத்துவிட்டான். வீட்டிற்கு போன போது அமைதியாய் இருந்தான். நான் அவனிடம் சென்று என்ன ஆச்சு என்பதை போல அவனை அணைத்து கொண்டேன். இறுக்கமாய் இருந்தான். வீட்டில் அவனின் அம்மா மற்றும் உறவுகள் எல்லாம் கதறி அழுது கொண்டிருக்க, இவன் மட்டும் அழவேயில்லை. அவனை பார்க்க எனக்குள் கொஞ்சம் பதட்டமாய் இருந்தது. அதற்குள் சடங்குகள் செய்ய ஆரம்பிக்க, அவனின் முகம் இன்னும் இறுக்கமாக ஆகிவிட்டிருந்தது.

எனக்கு தெரிந்து இவ்வளவு இறுக்கமாய் அவன் இருந்ததேயில்லை. இடுகாட்டில் மேலும் சடங்குகள் அவனை ஆக்கிரமிக்க, வாய்கரிசி போடும்போது கூட அவன் அழவில்லை, எனக்குபொறுக்கவில்லை. "டேய்.. வீட்டில நீ அழாம இருக்கிறது சரி. ஆனா இங்கயாவது நீ அழுதுடு. இல்லாட்டி ரிலீப்பாக மாட்டே" என்று காதோரம் கிசுகிசுக்க, அவன் என்னை நேராய் பார்த்துவிட்டு ஏதும் சொல்லாமல் மின் எரியூட்டியில் வைக்கப்பட்ட அவனது அப்பாவை தீக்குள் அனுப்பிவிட்டு, திரும்பி பார்க்காமல் நடந்துவந்தான்.வெளியே வந்ததும் அவனின் உறவினர்களிடம் சாஸ்திரிகள் அழைத்து எதோ சொல்ல அவனை ஒரு இடத்தில் தரையில் உட்காரவைக்க எதிரே ஒரு நாவிதர் மெல்ல தன் கையிலிருந்த கத்தியை எடுத்து அவனின் மீசைமீது வைத்து மழிக்க ஆரம்பித்த நொடி "ஓ"வென அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான் சங்கரன். அவனின் அழுகைக்கான சரியான காரணம் எனக்கு மட்டும் புரிந்தது.

. இஸ்லாம் எங்கள் வழி! இன்பத் தமிழ் எங்கள் மொழி!




பொதுவாக தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் தந்தையை "அத்தா" என்றோ "வாப்பா" என்றோ அழைப்பார்கள். கொங்கு மண்டல மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்களான மத்திய மண்டல மாவட்டங்களில் உள்ள இஸ்லாமியர்கள் அத்தா எனவும் தென் மண்டல இஸ்லாமியர்கள் வாப்பா எனவும் அழைப்பார்கள். இவ்விரு வார்த்தைகளும் அரபு அல்லது உருது வார்த்தைகள் என்ற எண்ணம் பிற மதத்தினருக்கு மட்டுமல்ல இஸ்லாமியர்களிலேயே பலருக்கும் உண்டு. ஆனால் இவ்விரு வார்த்தைகளும் சுத்த தமிழ் வார்த்தைகள். அப்பர் பெருமான் சிவபெருமானை விளிக்கும் போதெல்லாம் தந்தையே என்பதற்காக "அத்தா" என்றே பாடல் முழுதும் அழைப்பார். உதாரணமாக இந்தப் பாடலைக்கூட சொல்லலாம்.. 


"அத்தா உன் அடியேனை என்பால் ஆர்த்தாய்

அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனன் அத்தனையும் பொறுத்தாயன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே"
--






காலை உணவு உண்பதை பசியாறியாச்சா? என்று நல்ல தமிழில் கேட்க்கும் வழக்கம் இன்றும் தமிழ் முஸ்லீம்களிடம் உண்டு. அதேபோல பிறமதச் சகோதரர்கள் இறைவனுக்காக உணவு உண்ணாது இருப்பதை பிற மொழியில் "விரதம்" இருக்கிறோம் என்று சொல்லும்போது "நோன்பு" வைத்திருக்கிறோம் என நல்ல தமிழில் சொல்பவர்கள் தமிழ்  இஸ்லாமியர்கள்.







ஆணம்(குழம்பு), ஏணம்(பாத்திரம்), வெஞ்சணம்( கூட்டு,பொறியல்) குப்பாயம், சொக்காய், தேத்தண்ணி(டீ) போன்ற இன்னும் பல வழக்கில் இல்லாத நல்ல பல தமிழ் சொற்கள் தமிழ் தாய்மொழி இஸ்லாமியர்களின் வீடுகளில் இன்றைக்கும் வெகு சகஜமாக பேச்சு வழக்கில் புழக்கத்தில் இருக்கின்றது. இன்னும் சற்று பெருமையாகவே சொன்னால் பெரும்பாலான தமிழ் தாய்மொழி இஸ்லாமியர்களின் பேச்சில் பெரும்பாலும் ஆங்கிலக் கலப்பிருக்காது. இஸ்லாம் எங்கள் வழி.இன்பத் தமிழ் எங்கள் மொழி :)

புத்தகங்களும்,நானும் ( சென்னை புத்தகக் கண்காட்சி ஸ்பெசல்)

புத்தகங்களுடனான அந்தச் சிறுவனின் உறவு தினப்பத்திரிக்கையில்தான் துவங்கியது. வீட்டிற்கு தவறாமல் வரும் தினத்தந்தியில் எழுத்துக்கூட்டிப் படிக்கத் துவங்கிய பருவத்தில் கன்னிதீவின் வழியாக அவனது பால்ய கற்பனைகள் தனக்கான பாதைகளைக் கண்டடைந்தது. இப்போது தினத்தந்தியில் கன்னிதீவு மட்டும்தான் வருகிறது. முன்பெல்லாம் இரண்டாம் பக்கத்தில் கன்னித்தீவும், மூன்றாம் பக்கத்தில் மற்றொரு படக்கதையும் வரும். மூன்றாம் பக்கத்தில் வரும் படக்கதை சரியாக 100 வது நாள் அன்று நிறைவடைந்துவிடும்.பின்னர் புதுக்கதை துவங்கும். ஜேம்ஸ்பாண்ட், துப்பறியும் சங்கர்லால் எனப் பலரும் அவனுக்கு நண்பர்களாக அறிமுகமானது தந்தியின் மூன்றாம் பக்கத்தில்தான். அறிமுகமான சில நாட்களுக்குத்தான் மூன்றாம் மனிதர்களாய்,நண்பர்களாய் இருப்பார்கள்,பின் வரும் நாட்களில் நான்தான் ஜேம்ஸ்பாண்ட் என்ற சுய உணர்விற்கு வந்துவிடுவான். ஜேம்ஸ்பாண்ட் உடம்பில் சட்டையில்லாமல் அரைக்கால் டிராயரோடு புதுக்கோட்டையின் தெருக்களில் சாகசம் புரிந்துகொண்டு இருப்பார்.




ஜேம்ஸ்பாண்ட் வளரத்துவங்கிய பருவத்தில் தினத்தந்தியின் அன்றைய கருப்பு வெள்ளை ஞாயிறுமலரில் ரமணி சந்திரனோ, லக்‌ஷ்மியோ அல்லது அனுராதா ரமணனோ கதை எழுதிக்கொண்டு இருப்பார்கள். மெல்ல ஜேம்ஸ்பாண்ட் தனது சாகசங்களைக் குறைத்துக்கொண்டு சமூக விரும்பியாக மாறிவிட்டார். பெண்களின் வேதனைகளும்,கொடுமைகளும் தீர ஒரே தீர்வு ரமணி சந்திரனை அல்லது அனுராதா ரமணனை முதல்வராக்குவதுதான், இதுதான் ஒரே வழி என்று தீர்க்கமாக முடிவெடுத்து இதுகுறித்து தனது தலைவர் கலைஞர் அவர்களுடன் கருத்துரையாடுவது என்ற முடிவிலும் இருந்தார். துரதிஷ்டவசமாக அன்றைய காலகட்டத்தில் தலைவர் கலைஞர் புதுக்கோட்டைப் பக்கம் வராமல் இருந்ததால் சந்திக்க இயலாமல் போனது. பின்னர் சந்திக்கும் வாய்ப்பு வந்த காலத்தில் சமூகவிரும்பி நிலையில் இருந்து அரசியல் ஆர்வலர் நிலைக்கு உயர்ந்துவிட்டதால் கருத்துரையாடும் திட்டத்தைக் கைவிட்டார்.



அரசியல் ஆர்வலர் என்ற நிலைக்கு உயர்ந்ததும் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்த கதையாக அவருக்கு தினத்தந்தி பிடிக்காமல் போனது. எல்லாக் கட்சி செய்தியோடும் அவன் கட்சி செய்தியையும் வெளியிடும் தினத்தந்தியைவிட திராவிட இனத்தின் போர்வாளாம் முரசொலிதான் மந்திரமாக மாறிப்போனது. அன்றைய கலைஞருக்கு கட்சிமேல் ராஜீவ் கொலைப்பழி, கோபால்சாமியின் துரோகம், செல்வி.ஜெயலலிதாவின் ஹிட்லர் காலப்பேயாட்டம் இப்படியெல்லாம் நெருக்குதல் இருந்தாலும் இவற்றுக்கும் மத்தியில் தான் படித்த நல்ல இலக்கிய நூல்களை, பெரியார்,அண்ணா எழுதிய இன உணர்வு நூல்களை தன் கொஞ்சு தமிழில் ஒவ்வோரு வாரமும் அறிமுகம் செய்வார். அதைப் படித்ததும் உள்ளூர் நூலகம் சென்று அவற்றை அன்றே படித்து தீர்ப்பது அவனது வாடிக்கையானது. கலைஞரின் அறிமுக நூல்களுக்காக நூலகம் சென்றதில் வேறு நல்ல புத்தகங்களும் கண்ணில்பட அவனது பள்ளி இறுதி மற்றும் கல்லூரிக்கால ஓய்வு நேரம் முழுவதும் நூலகங்களிலேயே சென்றது. சற்றே திரும்பிப் பார்த்தபோது தங்கள் ஓய்வு நேரங்களைப் பயனுள்ள வழியில்செலவழித்த அவனது நண்பர்கள் ஒவ்வோரு பிகரோடும் செட்டிலாயி சுற்றிக்கொண்டு இருப்பது கண்டு தன் டீன்ஏஜ் பருவத்தை திசை திருப்பிய தலைவர் கலைஞர் மேல் அவனுக்கு முதல்முறையாக சிறிது கோபம் வந்தது.



மேற்படிப்பிற்காக சென்னை வந்த இடத்தில் அவனைப்போலவே ஒரு புத்தக்கிறுக்கன் அறிமுகமானான். அவன்பெயர் நா.முத்துக்குமார். ஒருநாள் முத்துக்குமார் அவனை அழைத்து தன்னுடைய ஓட்டை சைக்கிளின் பின்புறம் அமரவைத்து மூச்சுவாங்க டபுள்ஸ் அடித்து அழைத்துச்சென்ற இடம் சென்னையில் வருடம்தோறும் நடக்கும் புத்தகச்சந்தை. அப்போது காகிதேமில்லத் கல்லூரியில்தான் புத்தகச்சந்தை நடந்துவந்தது. இப்போதுபோல அத்தனை பிரம்மாண்டம் இல்லை. ஆனால் அவன் சென்று வந்த நூலகங்களைவிட மிகப்பெரியது. அன்றைக்கு பார்க்கும் புத்தகங்களை எல்லாம் வாங்கும் அளவிற்கு வசதியில்லாததால் அவன் ஏக்கப் பெருமூச்சின் சூட்டில் அங்கிருந்த புத்தகங்களின் பக்கங்கள் மேலும் மொடமொடப்பானது.



அதிகம் உழைக்க வேண்டும்,மேலும் மேலும் உழைக்க வேண்டும், அதிதீவிரமாக உழைக்க வேண்டும். பார்க்கும் புத்தகங்களை எல்லாம் வாங்க வேண்டும் என்ற அவனது ஏக்கக் கனவுதான் அவனது இன்றைய வாழ்க்கையை உயர்த்தியிருக்கிறது என்பதால் புத்தச்சந்தைமேல் அவனுக்கு இன்றும்,என்றும் நன்றியுணர்ச்சி உண்டு. எல்லாவற்றிற்கும்போல் வாழ்க்கைக்கென்றும் ஒரு வாசம் இருக்கிறதா? புதுபுத்தகங்களை வாசிக்கப் பிரிக்கும் போது அதில் இருந்து கிளம்பும் வாசம்தான் வாழ்க்கையின் வாசம் என்பதை இப்போது உணர முடிகிறது.




நினைத்தேன் எழுதுகிறேன்.




குஜராத்தில் மோடி அரசு கள்ளச் சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை என்ற புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. உலகெங்கிலும் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் வலுத்து வரும் இந்நிலையில் மோடியின் இந்த செய்கை நிச்சயம் விவாதத்திற்குறியதே. அரசின் அனுமதியின் தயாரிக்கப்படும் மது கள்ள சாராயம். அனுமதி இருந்தால் நல்ல சாராயம். கள்ளச் சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை என்றால் நல்ல சாராயம் காய்ச்சும் அரசுக்கு? நீண்ட நாட்களாக பொதுவாழ்வில் இருப்பவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், மரண தண்டனை தருவதால் கள்ளச் சாராயம் காய்ச்சுவதை நிறுத்தவே முடியாது. தற்போது கள்ளச் சாராயம் காய்ச்சுவது பிடிக்கப்பட்டாலோ அல்லது கள்ளச்சாராயத்தால் மரணம் சம்பவித்தாலோ அந்த சர்க்கிளுக்கு உட்பட்ட எஸ்.ஐ சில நாட்கள் சஸ்பென்ட் செய்யப்படுவார். பிறகு துறை ரீதியான விசாரணை அது இதுவென அவர்மீதான குற்றச்சாட்டில் இருந்து வெளியே வந்துவிடுவார். அதற்கு பதிலாக அந்த மாவட்ட எஸ்.பி, அந்த பகுதியின் டி.எஸ்.பி அந்த சர்கிள் ஸ்டேசனில் வேலை செய்யும் இன்ஸ்பெக்டர் துவங்கி கடைநிலை காவலர் வரை அத்தனை பேரும் எந்தக் கேள்வி கேட்பாடுமின்றி டிஸ்மிஸ் என அறிவித்தால் நிச்சயம் கள்ளச்சாராயம் ஒழியும்.மாறாக மரண தண்டனை என்று அறிவிப்பதன் மூலம் தூக்கின் வாயிலாக சில உயிர்களையும், சாராயம் வாயிலாக பல உயிர்களையும் பறிக்க மட்டுமே இது உதவும்.

 ________________________________________

இராம.கோபாலன் என்று ஒரு அதி பயங்கர அறிவாளி. முல்லைபெரியாறு அணைப் பிரச்சனையை கேரளாவில் கிருஸ்துவ இயக்கங்கள்தான் தமிழக பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதை தடுப்பதற்காக பெரிதாக்குவதாக திருவாய் மலர்திருக்கிறார். தண்ணிப் பிரச்சனை ஏற்கனவே மாநிலப் பிரச்சனையாயிருச்சு. இனி இந்தாள் புண்ணியத்துல மதப்பிரச்சனை வேற! ஏன் சார் கேரளாவெல்லாம் போறீங்க. அங்க யாருக்கும் உங்களைத் தெரியாது. உங்களை நல்லாத் தெரிஞ்ச்ச தமிழ்நாட்டுலயே நீங்க இதை மதப் பிரச்சனையாக்கலாம். எப்படின்னு கேக்குறீங்களா?கிருஸ்துவரான ஜான் பென்னி குயிக் கட்டிய அணையில் தேங்கிவரும் நீரை தமிழக இந்துக்கள் பயன்படுத்தக்கூடாதுனு ஒரே ஒரு அறிக்கை விட்டுப் பாருங்களேன் இராம.கோபாலன் சார்!!

_________________________________________ 

அண்ணன் வடிவேலு சிலகால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தற்போது திரு.பிரசாந்த் அவர்களின் பட்த்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவர் அரசியல் முகம் காட்டிய நேரத்தில் நண்பர் கேபிள் சங்கரிடம்  பேசும்போது இந்த முடிவு அவருக்கும்,திரை உலகிற்கும் பெரும் இழப்பாக இருக்கும் என்று தெரிவித்தேன். அப்பிடின்னா திமுக தோத்துரும்னு முன்னாடியே தெரியுமான்னு கேக்காதிங்க! நான் சொன்ன காரணம் அரசியலுக்கு அடிப்படைத் தேவை நிதானம்.ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கின் மனநிலை. ஆனால் இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவு செய்ததே நிதானத்தில் அல்ல கோபமான ஒரு மனநிலையில். தனக்கு அரசியல் சரிவரும்!வராது! என்று நிதானித்து முடிவெடுத்து இருந்தால் இந்நிலை வந்திருக்காது. மகாகலைஞன். சத்தியம்.. நாம் வாழும் காலத்தில் நாம் பார்க்க்க் குடுத்து வைத்த ஒரு மகா கலைஞன் வடிவேலு. நியாயமாக திரைத்துறை அவரது அரசியலையும், நடிப்பயையும் முடிச்சிட்டு அவரை இத்தனை காலம் ஒதுக்கியிருக்க்க்கூடாது. என்ன செய்வது, உலகில் நன்றி என்ற வார்த்தைக்கு அர்த்தம் மிகக் குறைந்த இடம் சினிமாவும்,அரசியலும். அவை இரண்டில் மட்டுமே வடிவேலு அண்ணன் இருந்துவிட்ட்து அந்த நகைச்சுவைக் கலைஞனின் பெரும் சோகம்.



ஸ்பெக்ட்ரம் - தேசம் சேமித்த பலலட்சம் கோடி




ஸ்பெக்ட்ரம்... கடந்த ஓராண்டாக இந்தியர்கள் இறைவனின் திருநாமத்தைவிட அதிகம் உச்சரித்த பெயர். சில பல வணிக விளையாட்டுகள்,சில பல சதிகள், சில பல அரசியல் சடுகுடுகள், அரசிற்கும்,நீதித்துறைக்குமான "தான் யார் என்ற அகங்காரங்கள்" இவற்றோடு மக்களிடையே மண்டையைக் குழப்பவைத்த மீடியாக்கள் என்று ஓராட்டம் ஆடி இப்போது இரண்டாம் சுற்றில் நிற்கிறது. என்னதான் நடந்தது இதில்? எதுதான் உண்மை?

ஸ்பெக்ட்ரம் என்பது அதிர்வெண்.அதாவது மெஹாஹெர்ட்ஸ்னு சொல்றோம் இல்லையா அதுதான். நாட்டில் உள்ள தாதுக்கள்,கனிமங்கள் போல இதுவும் ஒரு வளம். சரி இது எதுக்கு அரசாங்கத்துகிட்ட இருக்கணும்? விசயம் சிம்பிள்.. இதை அரசாங்கம் ஒழுங்கு செய்யாம ஆளுக்காள் ஒரே அலைவரிசையில் செயல்படுத்த ஆரமிச்சா தகவல் தொடர்பில் குழப்பம் வரும். சரி 2ஜி அப்படின்னா என்ன? இதுக்கு முன்னாடி 1ஜி இருந்ததால இது 2ஜி. ஆஹா.. அப்ப 1ஜி அப்படின்னா என்ன? முதன்முதலில் செல்பேசி சேவை அனலாக் முறையில் இயங்கியது. தாத்தா காலத்து டெக்னாலஜி. அதுல நீங்க பேசுனா நான் கேக்கலாம், நான் பேசுனா நீங்க கேக்கலாம்.இதைத்தாண்டி ஒரு வசதியும் கிடையாது. அதுவும்கூட அத்தனை துல்லியமாக சில நேரம் இருக்காது.

அடுத்து வந்தது டிஜிட்டல் தொழில்நுட்பம். இதுதான் 2ஜி. இது gsm மற்றும் cட்ம அப்படின்னு ரெண்டு வழில இயங்குது.  இந்தச் சேவைகள், 800, 900, 1800, 1900 மெகா ஹெர்ட்சில் ஏதோ ஒன்றில் வேலை செய்யும். ஒவ்வோரு நாட்டுலயும் வேறவேற‌ அதிர்வெண்ல‌ இருக்கும். இந்தியாவில் 900, 1800 என்ற இரண்டு அதிர்வெண்களில் செல்பேசிச் சேவைகள் இயங்குகின்றன.

1800 மெகா ஹெர்ட்ஸில் செல்பேசிச் சேவை இயங்குறதுன்னா என்ன? இந்த‌ அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட அலைப் பரவலை (spectrum) இந்தச் சேவைக்காக ஒதுக்குவார்கள்.  செல்பேசிச் சேவைக்கு அதை நடத்தும் ஒவ்வொரு நிறுவனத்துக்கு இரண்டு பரவல் தேவை. ஒன்று, செல்பேசிச் சேவையின் மையம்.இது இவர்கள் தங்கள் செல்பேசி கோபுரங்களோடு தொடர்பு கொள்ள. மற்றொன்று கோபுரங்கள் தனிப்பட்ட செல்பேசிகளுடன் தொடர்பு கொள்ள. அதாவது அப்லிங் மற்றும் டவுன்லிங். இதுக்காக தகவல் தொடர்பு அமைச்சகம் 75 மெகாஹெர்ட்ஸ் அப்லிங்கிற்கும் 75 மெஹா ஹெர்ட்ஸ் டவுன்லிங்கிற்கும் தருகிறது. அதாவது மொத்தம் 150 மெஹா ஹர்ட்ஸ். இந்த 150 மெஹா ஹர்ட்ஸ்குள்ள அமைச்சகம் எத்தனை நிறுவனங்களை அனுமதிக்கலாம்? தகவல் தொடர்பு அமைச்சகம், ஒரு GSM நிறுவனத்துக்கு 10 மெகா ஹெர்ட்ஸ் பரவலும், ஒரு CDMA நிறுவனத்துக்கு 5 மெகா ஹெர்ட்ஸ் பரவலும் தரலாம் என்று அதற்குமேல் தரக்கூடாது என்பது சட்டம். ஆக, சுமார் 10 நிறுவனங்கள்தான் அதிகபட்சம் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இருக்கமுடியும். 900, 1800 ஆகிய இரண்டையும் சேர்த்தால், இதைப்போல இரண்டு மடங்கு இருக்கமுடியும்.

சரியா! இப்போ இருக்குற மெகாஹர்ட்ஸைத் தாண்டி அதிகமான நிறுவனங்கள் விண்ணப்பிக்கும்போது அரசு என்ன செய்யும்? சிம்பிள் ஏலம்விடும். ஏன் ஏலம் விடணும்? அப்பதான் யார் அதிகம் கேக்குறாங்களோ அவங்களுக்கு குடுக்கலாம். அரசுக்கும் அதிக பணம் கிடைக்கும். ஆ.ராசா என்ன செஞ்சாரு? ஏலம் விடாம அமைச்சகமே ஒருவிலையை நிர்ணயித்து முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கினார். இதுனால என்னாச்சு? என்னாச்சா... எவ்வளவு பெரிய துரோகம் இது!! ஏலம் விட்டுருந்தா 1,76,000 கோடிக்கு போயிருக்கும். ஆனா இந்தாளு முன்னுரிமையில் குடுத்தால வெறும் 30,984.55 கோடிதான் அரசுக்கு வந்துச்சு. எவ்வளவு பெரிய பச்சை துரோகம் இந்தாள் செஞ்சது!! இல்லையா? இப்படித்தான் படிச்சதும் தோணும். கொஞ்சம் அதன் மறுபுறத்தையும் பார்ப்போமா?

ஏன் ராஜா இப்படிச் செஞ்சாரு? முதன்முதலில் 1997 இல் சென்னையில் ஸ்கைசெல் நிறுவனத்தின் செல்பேசி உபயோகித்தவர்களுக்குத் தெரியும். அவுட் கோயிங் ஒரு நிமிடத்திற்கு 20 ரூபாய், இன்கம்மிங் 15 ரூபாய். 20 ரூபாய் என்பது அன்று ஒரு தினக் கூலிக்காரரின் ஒருநாள் சம்பளம்.  ஏன் அவ்வளவு விலை?? காரணம் அன்று அலைக்கற்றை ஏலமுறையில் ஒதுக்கீடு செய்ததால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மிக அதிகவிலை குடுத்து அந்த உரிமையை வாங்கியது, வாங்கிய தொகையை யார் தலையில் கட்டும்? பயனாளர் தலையில் கட்டும். அதனால்தான் அந்த ரேட்.

அன்று ஒரு தினக்கூலிக்காரரின் ஒருநாள் சம்பளத்தொகையை ஒரே ஒரு அழைப்பிற்காக செலவு செய்த நிலைபோய் இன்று ஒரு தினக்கூலிக்காரர் தான் எங்கே வேலைக்கு வரவேன்டும் என்பதை தன்னுடைய செல்பேசியில் கேட்டு தெரிந்துகொண்டு வரும் நிலைக்கு மலிவாகிவிட்டது தகவல்தொடர்பு. எப்படி? காரணம் அதே ஆ.ராசா. ஏலமுறையில் விலை ஏற்றிக் குடுக்காமல் நிர்ணய விலையில் அலைக்கற்றைகளை வழங்கியதால் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு கிடைத்தது. அதனால் அதிக விலை வைக்காமல் 50 பைசா என்ற அளவில் மிகக் குறைந்த விலையில் அழைப்பினை நிறுவனங்கள் வழங்குகிறது.

சரி சார், குப்பனும்,சுப்பனும் செல் பேசலை யார் சார் இப்ப அடிச்சுகிட்டா? நாட்டுல நாலு பெரிய மனுசன் பேசுனாப் போதாதா? அப்படிப் பார்த்தா இந்தாள் தேசத்துக்கு 1,76,000 கோடி இழப்பு ஏற்படுத்துனது உண்மைதானே சார்?  ஆமாம் சார். உண்மைதான். ஏல முறையைத் தவிர்த்தால் இழப்பு ஏற்படும்னு தெரிஞ்சேதான் செஞ்சார். " அட அயோக்கியப் பயலுகாளா? தெரிஞ்சேதான் செஞ்சிகளாடா பாவிகளா"ன்னு தோணுதா? கொஞ்சம் வெயிட் பண்ணி அடுத்த பத்தியைப் படிச்சுட்டு அந்த முடிவு சரியா தப்பான்னு யோசிங்க‌.

நானும் நீங்களும் நாளை மீண்டும் நேரில் சந்திப்பதாக இன்று நேரில் பேசிக்கொண்டு இருக்கும்போது முடிவு செய்கிறோம். சந்தர்ப்ப வசத்தால் நாளை நான் வேறு இடத்திற்கு செல்ல வேன்டிய சூழல். என்ன செய்வேன்? இப்போது மலிவுவிலையில் செல் இருப்பதால் 50 பைசாவிற்கு உங்களை அழைத்து நான் வர இயலாததைச் சொல்லிவிடுவேன். நீங்களும் வரமாட்டிர்கள். ஆனால் நாட்டில் இப்போதும் அவுட் கோயிங் 20 ரூபாய் இன்கம்மிங் 15 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தால் என்ன ஆகும்? சத்தியமாக இதை எழுதும் என்னிடமும், இதைப் படிக்கும் உங்களிடமும் நிச்சயம் செல்பேசி இருக்காது. நான் உங்களைத் தொடர்புகொள்ள முடியாது. நாளை நீங்கள் என்னைப் பார்க்க வடபழனியில் இருந்து என் வீடு இருக்கும் ஆழ்வார்பேட்டை வருகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வந்து பார்த்த பின்னர் வீட்டில் என் மனைவி சொல்லித்தான் நான் இல்லை என்பதே உங்களுக்குத் தெரியும். அங்கிருந்து வர 15 கிலோமீட்டர் போக 15 கிலோமீட்டர் என 30 கிமீக்கு குறைந்தது அரைலிட்டர் பெட்ரோல் செலவாகியிருக்கும். குறைந்தது 33 ரூபாய் உங்களுக்கு இழப்பு. உங்களுக்கு என்றால் உங்களுடைய இழப்பு அல்ல, எரிபொருள் என்ற அளவில் இது தேசத்தின் இழப்பு. இந்த 33 ரூபாயில் வரிக்கு முந்தைய அடக்கவிலையான குறைந்தது 15 ரூபாய் அன்னிய செலாவனியாக அரபு நாடுகளுக்குப் போய்விடும். நம் இருவரைப்போல நாட்டில் எத்தனை கோடி பேர்? எத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் மிச்சம்? இது ஒரு சிறு உதாரணம்தான். இதுபோல பல உதாரணங்களை தகவல் தொடர்பு மலிவினால் தேசத்திற்கு கிடைத்த சேமிப்பை என்னால் அடுக்கிக்கொண்டே போகமுடியும். ஆம் ஆ.ராசா 1,76,000 கோடி இழப்பை ஏற்படுத்தினார். அதே நேரத்தில் கணக்கிட முடியாத லட்சம்கோடியை இந்த தேசத்திற்கு சேமித்துள்ளார். காமாலைக்கரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். பலருக்கும் அவர் ஏற்படுத்திய இழப்பு தெரிகிறது, எனக்கு அதனால் விளைந்த சேமிப்பு தெரிகிறது. ஒரு அமைச்சராக குப்பனையும்,சுப்பனையும் செல்பேச வைத்ததோடு  இந்த தேசத்திற்கும் பலபலபல இலட்சம் கோடிகளை சேமித்துத்தந்த அமைச்சர் ஆ.ராசாவிற்கு என் வந்தனங்கள்.

யுடான்ஸ் நட்சத்திரம்





ஒரு சிறு இடைவெளி.. அதிகம் இல்லை ஜென்டில்மேன் ஜஸ்ட் ஒரு வருஷம்தான் ஆகுது கடைசியா இடுகையிட்டு. வலைப்பூக்களில் தீவிரமாக இயங்கிய காலத்திலேயே தொடர்ச்சியாக இடைவெளியின்றி எழுதியவனல்ல. இருப்பினும் எழுதாமலேயே இருந்தவனும் அல்ல. ஆனால் இந்த ஒரு வருட காலத்தில் ஒன்றும் எழுதவுமில்லை, தோனவுமில்லை. இந்த விசயத்தில் நான் மட்டுமல்ல என் போல பலரையும் கெடுத்தது கூகிள் பஸ். அரசியல் சார்ந்தவன், பெரும் பொறுப்பில் இருப்பவன் இப்படியெல்லாம் இருந்தாலும் எந்த இமேஜ் கவலைகளுமின்றி பின்னூட்டப் பெட்டிகளில் கும்மி அடிக்க ஒருபோதும் கவலைகொண்டதில்லை.பலரும் உலகம் முழுவதிலிருந்தும் பார்க்கும் பொதுவெளியிலேயே இப்படியென்றால் சில நூறு பேர்களுக்குள் இயங்கும் கூகிள் பஸ்சில்.. அதுவும் ஒத்த அலைவரிசை நண்பர்கள் மட்டும் கூடும் கூகுள் பஸ்சில்.. கேட்கவா வேண்டும்?!?!?  ஆசைதீர ஆடித்தீர்த்தோம். வலைப்பூக்கள் பக்கம் வர எண்ணமேயின்றி முழுநேரமும் அங்கேயே பொழுதைத் தொலைத்தோம். இப்பொதும் இங்கே மீண்டு(ம்) வரக் காரணம் வெகு விரைவில் எங்கள் தொல்லை தாங்காமல் பஸ்சை கூகிள் மூடுவதுதான்.இனி நான் மட்டுமல்ல.நண்பர்கள் குசும்பன்,வித்யா,கேவியார்,விஜியக்கா,வெண்பூ எனப் பலரையும் இனி இங்கே முன்போல் தொடர்ச்சியாகக் காணலாம்.



சாதாரணமாக நான் ஒரு இடுகையிட்டால் சுமார் ஆயிரத்திற்கும் மேல் ஹிட்ஸ்களும் 50 க்கும் மேல் பின்னூட்டமும் வரும். ஆனால் இந்த இடைவெளியில் இது மீண்டும் சாத்தியமா என்று தெரியவில்லை. வலைப்பூ நண்பர்கள் பலரையும் விட்டு விலகிவிட்டது இப்போதுதான் சிறு வருத்தத்தோடு உணரமுடிகிறது. எனது இரண்டாம் இன்னிங்சை யுடான்ஸ் திரட்டியின் நட்சத்திரமாக்கி மீண்டும் துவக்கி வைத்த நண்பர் கேபிள் சங்கருக்கு என் அன்பு. மீண்டும் இன்றே சந்திப்போம்.

இனமானப் பேராசான் வாழ்கவே

















அன்னைத் தமிழுக்கு
மாணவன்
அருமைத் தம்பியர்க்கு
பேராசான்.

அவர்..
கற்பூரக் கனல்
பேச்சால்
கழகம் வளர்ந்தது.
கரைபடா கரத்தின்
உழைப்பால்
கல்வித்துறை
சிறந்தது.

இனத்திற்காய் எழுதும்
எனக்கே எழுதுகிறார்
பேராசிரியர் என்றார்
கலைஞர்.

தேடித் தேடிப் படிப்பதில்
தெளிவாய் சிந்திப்பதில்
தீர்க்கமாய் உழைப்பதில்
பேராசான் கலைஞருக்கே
முன்னுதாரணம்
என்பதை எவரும் அறியார்.
அதைப்
பெருமைப்படுத்திக்கொள்ள
இவரும் தெரியார்.

இனமானம் அவர்
பேச்சு
சுயமரியாதை அவர்
மூச்சு.

அகவை 89 இல்
அடிவைக்கும் ஆசானே
இனம்வாழ
மொழிவாழ
இன்னும் 100 ஆண்டுகள்
இரும்.

பேராசிரியப் பெருந்தகை
வாழிய!வாழிய!வாழியவே!