அப்பா என்றாலும் அன்பு
16:24
நானும் சங்கரனும் ஒருவருக்கொருவர் பெயர் சொல்லி அழைப்பதை விடுத்து மாப்ளை என்று பரஸ்பரம் அழைக்கத் துவங்கியபோது நாங்கள் ஆறாம் வகுப்பில் நுழைந்து இருந்தோம்..கழுத்தில் கட்டிக்க டை,காலில் போட்டுக்கொள்ள ஷூ இதையெல்லாம் விடுங்கள்...சீருடை கூட இல்லாத பஞ்சாயத்துப் பள்ளி எங்கள் பள்ளி. நாட்டுச் சீமை ஓடு வேயப்பட்ட நீளமான கட்டிடம்.உத்திரத்தில் இருந்து அவ்வப்போது விழுந்து பரபரப்பைக் கிளப்பும் மழைத் துளி, சில சமயங்களில் தேளும்கூட. நாங்கள் உட்கார பெஞ்செல்லாம் கிடையாது.ஒன்லி தரைதான். நடுவில் பாதைவிட்டு மாணவர்களும் மாணவியரும் இரு பகுதிகளில் ஐய்ந்தைந்து பேர் வருசையாக மொத்தம் ஆறு வரிசைகளில் பிரித்து அமர்ந்திருப்பர்.
ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு மாறும்போது நானும் சங்கரனும் ஆறாம் வரிசையில் சுவற்றின் ஓரமாக அமர வைக்கப்பட்டோம்.. வகுப்பு துவங்கியதில் இருந்து சங்கரன் ஒன்னுமே எழுதலை. ‘ஏன்டா எழுதாம இருக்க?’ என்று நான் கேட்டபோது பதில் சொல்லாத சங்கரன் ரங்கநாதன்சார் கேட்டப்ப போர்டு லேசா மங்கலா இருக்குது சார் அப்பிடின்னான். அவனை முன்னாடி வரச் சொன்ன சார் இங்கேந்து தெரியுதான்னு கேட்க, நல்லாத் தெரியுது சார்னு சொல்லி சடார் என அங்கேயே அதாவது முதல் வரிசையில் மாணவ,மாணவியரைப் பிரிக்கும் பாதையின் ஓரத்தில் அமர்ந்து விட்டான். என்னாச்சு அவனுக்கு என்ற குழப்பத்திலும்,பதட்டத்திலும் நான் இருக்க, லேசாக பின்னால் திரும்பி என்னை நக்கலாகப் பார்த்து ஒரு குறுஞ் சிரிப்பொன்று உதிர்த்தான்.
அடுத்த நாள் மாலை நான் அவனிடம் ’ஏன்டா கண்ணு சரியா தெரியலைன்னு சார்கிட்ட சொன்னியே! வீட்டுல சொல்லி கண் டாக்டரைப் பாத்தீங்களாடான்னு’ கேட்க, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு "கண்ணெல்லாம் நல்லாத்தான் தெரியுது.ஆனா அங்க ஒக்காந்தாத்தான் சிவகாமசுந்தரி புள்ளகிட்ட பேசமுடியும்"அப்படின்னான். எனக்குத் தெரிந்து என் செட்டில் விஞ்ஞானப்பூர்வமாக சைட் அடித்த முதல் நபர் அவன்தான். வருடம் மாறமாற அவன் சைட் அடிக்கும் பெண்களும் மாறிக்கொண்டே இருந்தார்கள்.ஆனால் அவன் மட்டும் சைட் அடிப்பதில் இருந்து மாறவேயில்லை.
எட்டில் இருந்து ஒன்பதாம் வகுப்பு மாறும் நாளை அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்தோம்..காரணம் அதுதான் பள்ளியில் எல்லோரும் டவுசரில் இருந்து ஃபேண்ட்டுக்கு மாறும் நாள். ஃபேண்டு போட்டதும் எல்லோரும் பெரிய மனுசங்களாக மகிழ்வாக உணர்ந்தோம்.அந்த ஆண்டிலேயே மற்ற அனைவரையும்விட சங்கரனுக்கு சீக்கிரமே ஒரு புரோமோஷன் கிடைத்தது.அது...மீசை.
எங்க எல்லாருக்கும் எட்டிக்கூடப் பார்க்காத அந்த நேரத்தில் சங்கரன் சனியனுக்கு மட்டும் மீசை நல்லாவே வரத் துவங்கியது. பத்தாம் வகுப்பில் நாங்கள் படித்தபோது அனைவரையும் அடிக்கும் சுப்ரமணியன் சார் அவனை மட்டும் அடிக்காமல் இருந்ததற்கு அவன் மீசைகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.எந்தப் பெண்ணையாவது பார்த்தால் தன் இடக்கையால் அதை ஸ்டைலாக நீவிவிட்டுக்கொள்வது அவனது அந்நாள் மேனரிசமானது.
பத்தாம் வகுப்பில் ஒரு ஆவணி அவிட்டத்திற்கு முந்தைய நாள் சங்கரன் என்னிடம் "மாப்ளே! நாளைக்கு எனக்கு பூணுல் கல்யாணம்.கிளாஸ்ல யாருகிட்டயும் நான் சொல்லலை.நீ அவசியம் வந்துருடா".
"பூணூல் கல்யாணம்னா என்னடா?"
"அது வேற ஒண்ணுமில்லை.மொதமொதல்ல எங்களுக்கு பூணூல் மாட்டுறதை பூணுல் கல்யாணம்பாங்க".
"ஒனக்காவது பரவாயில்லைடா.மாட்டுற வேலை. எங்களுக்கு சுன்னத் கல்யாணம்னு ஒன்னு பண்ணுவாய்ங்க.அது எடுக்குற வேலை. உசுரு போகும்" என்ற என்னை பார்த்து சிரித்துக்கொண்டே சென்றான்.
காலை பத்துமணி நிகழ்ச்சிக்கு நான் எட்டு மணிக்கே சங்கரன் வீட்டிற்குச் சென்று விட்டேன்.அண்ணன் வெகு குஜாலாக இருந்ததைக் கண்டு ஃபங்ஷன்னால ஜாலியா இருக்கான்போல என நினைத்தேன். குஜாலுக்கு காரணம் அதுவல்ல..அவன் உறவினர் பெண் காயத்ரி என்று சிறிது நிமிடத்திலேயே புரிந்துவிட்டது. அவள் இருக்கும் பக்கமாகவே இவன் செல்வதும் இருவரும் லுக் விடுவதும் என்னை மட்டும் சாட்சியாக வைத்து நடந்து கொண்டிருந்தது. ஒரு தூண் மறைப்பில் இருந்து அவள் இவனை கைகாட்டி அழைக்க குஷியாக சென்றவன் சற்றே வாடிய முகத்தோடு உடனே திரும்பினான்.
"என்னடா மாப்ள? என்ன சொன்னா?"
"என் மீசை ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னாடா"
"அதையேன் வருத்தமாச் சொல்லுற?"
"இல்லைடா பூணூல் போடுறதுக்கு முன்னாடி அதை வழிச்சு விட்டுருவாங்கடா" என்றவன் மேற்றொண்டு எதுவும் பேசாமல் உள்ளே போய்விட்டான்.அப்பொழுதே அவன் கண்கள் கலங்கத் துவங்கியது நன்றாகவே தெரிந்தது. அவனுக்கு மீசை எடுக்கும் அந்த நேரமும் வந்தது.மீசையை எடுக்க வேண்டாம் என்று அவன் அப்பாவிடம் அவன் போராட அவரோ "உனக்காவது பரவாயில்லை மீசையை மட்டும்தான் எடுக்குறாங்க. எனக்கெல்லாம் பூணூல் போட்ட அந்தக் காலத்துல தலையிலே முன்பக்கம் பாதி முடியையும் சேர்த்தே எடுத்துருவாங்க.பேசாம உக்காருடா" என்றார்.
மீசைமேல் நாவிதர் கத்தியை வைத்த அந்த நேரத்தில் அழவே துவங்கிவிட்டான்.
"டேய்!என்டா அழற? ஒரு ஆம்பளைப் பையன் அவனோட தோப்பனார் செத்து கொள்ளி வைக்கிறச்ச மீசை எடுப்பால்ல...அப்போ மட்டுந்தான் அழணும்.இப்போ அழப்படாது" என்ற அவனது அப்பாவின் குரல்கேட்டு எங்கேதான் சென்றதோ அதுவரை இருந்த அவனது கண்ணீர்?
பின்னர் இளநிலை பட்டப் படிப்பு முடித்து முதுகலைப் படிப்பிற்காக நான் சென்னை வந்தபோது சங்கரனும் சென்னைக்கு வேலை கிடைத்து வந்து விட்டான். ஒருநாள் இருவரும் திருவல்லிக்கேணி ரத்னா கஃபே அருகில் டூவீலரில் செல்லும்போது குறுக்கே பாய்ந்த நாயால் கீழே விழ, இருவருக்குமே சமமான அடி. வலியால் என் கண்களில் இருந்து நீர் கொட்ட, சங்கரனைப் பார்க்கிறேன்.அத்தனை வலியிலும் அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. எனக்கு தெரிந்து அவன் பூணூல் கல்யாணத்தின் போது அழுததை தவிர வேறெப்போதும் அழுது பார்த்ததேயில்லை.
இன்று காலையில் சங்கரன் போன் செய்திருந்தான். குரல் கொஞ்சம் கம்மியிருக்க," என்னடா சங்கரா..?" என்றேன் "அப்பா போயிட்டாரு வந்திருன்னுட்டு" போனை வச்சிட்டான். எனக்கு தூக்கிவாரி போட்டுச்சு. நேத்து கூட போனில பேசினேன். என்ன ஆயிற்று? என்று கேட்பதற்குள் போனை வைத்துவிட்டான். வீட்டிற்கு போன போது அமைதியாய் இருந்தான். நான் அவனிடம் சென்று என்ன ஆச்சு என்பதை போல அவனை அணைத்து கொண்டேன். இறுக்கமாய் இருந்தான். வீட்டில் அவனின் அம்மா மற்றும் உறவுகள் எல்லாம் கதறி அழுது கொண்டிருக்க, இவன் மட்டும் அழவேயில்லை. அவனை பார்க்க எனக்குள் கொஞ்சம் பதட்டமாய் இருந்தது. அதற்குள் சடங்குகள் செய்ய ஆரம்பிக்க, அவனின் முகம் இன்னும் இறுக்கமாக ஆகிவிட்டிருந்தது.
எனக்கு தெரிந்து இவ்வளவு இறுக்கமாய் அவன் இருந்ததேயில்லை. இடுகாட்டில் மேலும் சடங்குகள் அவனை ஆக்கிரமிக்க, வாய்கரிசி போடும்போது கூட அவன் அழவில்லை, எனக்குபொறுக்கவில்லை. "டேய்.. வீட்டில நீ அழாம இருக்கிறது சரி. ஆனா இங்கயாவது நீ அழுதுடு. இல்லாட்டி ரிலீப்பாக மாட்டே" என்று காதோரம் கிசுகிசுக்க, அவன் என்னை நேராய் பார்த்துவிட்டு ஏதும் சொல்லாமல் மின் எரியூட்டியில் வைக்கப்பட்ட அவனது அப்பாவை தீக்குள் அனுப்பிவிட்டு, திரும்பி பார்க்காமல் நடந்துவந்தான்.வெளியே வந்ததும் அவனின் உறவினர்களிடம் சாஸ்திரிகள் அழைத்து எதோ சொல்ல அவனை ஒரு இடத்தில் தரையில் உட்காரவைக்க எதிரே ஒரு நாவிதர் மெல்ல தன் கையிலிருந்த கத்தியை எடுத்து அவனின் மீசைமீது வைத்து மழிக்க ஆரம்பித்த நொடி "ஓ"வென அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான் சங்கரன். அவனின் அழுகைக்கான சரியான காரணம் எனக்கு மட்டும் புரிந்தது.







