அயோத்’தீ’

அயோத்தி வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பு எப்படி வருமோ என்ற கவலை எனக்குச் சிறிதுமில்லை.அதைவிட எத்தனை உயிர்கள் போகுமோ என்ற கவலையே பெரிதும் வாட்டுகின்றது.என்னுடைய பதின்மப் பருவத்திற்கு முந்திய ஒரு அழகான நாட்கள் இருந்தது.வணக்கமுறை என்ற ஒன்றைத் தவிர மற்றபடி கலாச்சாரத்தாலும்,மனிதாபிமானத்தாலும் மட்டுமே மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்த அந்த நாட்கள்  பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர் சிறிது குறையத் துவங்கிவிட்டது அப்பட்டமான உண்மை.


‘‘இந்திய முஸ்லிம்களை இந்தியாவுக்கு எதிரான சக்தியாக மாற்ற பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ. எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் ‘நாங்கள் இந்தியர்’ என்று ஒருங்கிணைந்து நின்றார்கள் இஸ்லாமியர்கள். பாபர் மசூதிதை இடித்ததன் மூலம் ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் செய்து முடித்தன’’.இதைச் சொன்னவர் இந்திய உளவு நிறுவனம் ‘ரா’வின் முன்னாள் உளவு உயர் அதிகாரி திரு.ராமன்.அந்த சமூகத்தில் இருந்து வந்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், இவை சத்தியமான வார்த்தைகள்.இன்றும் சில இஸ்லாமியர்கள் கிரிக்கெட் விளையாட்டில் பாக்கிஸ்தான் ஆதரவாளர்களாக இருப்பதைப் பார்க்கலாம்.இந்த பழக்கம் முதன்முதலில் துவங்கியது மசூதி இடிப்பிற்குப் பின்னர்தான்.என்னுடைய நண்பன் நிஜாம் தீவிர கிரிக்கெட் ரசிகன்,அதி தீவிர இந்திய அணியின் வெறியன்,மசூதி இடிப்பிற்குப் பின்னர் ஒரே நொடியில் பாக்கிஸ்தான் அணியின் ஆதரவாளனாக மாறிப்போனான்.”ஏண்டா மாப்ள?”என்ற என்னுடைய கேள்விக்கு அவன் கைகள் சுட்டிக்காட்டிய இடம் அயோத்தி.”அதுக்கும்,இதுக்கும் என்னடா சம்மந்தம்??இந்தியாவுல இருக்குற எல்லா இந்துக்களும் ஒன்னுகூடியா இடிச்சாங்க?? அதை இடிச்சதை ஆதரிச்ச இந்துக்களைவிட எதிர்த்த இந்துக்களின் எண்ணிக்கைதானடா ஜாஸ்தி” என்ற என் வார்த்தைகளை காதில் வாங்கும் மனநிலையில் அன்று அவன் மட்டுமல்ல பெரும்பாலான இஸ்லாமியர்கள் எவருமே இல்லை.எண்னிக்கையில் கம்மியா இருக்குறதாலதானே கைவச்ச? எனக்கும் ஆள் இருக்குன்னு காட்டும் விதமாக தங்கள் எண்ணிக்கையை கூட்டும் முகமாக பிற தேசத்து இஸ்லாமியர்களோடு மத அடிப்படையில் தன்னை இனைத்துக்கொண்டு எண்ணிக்கையை உயர்த்திக்காட்டிப் பாதுகாப்பு தேடும் மனநிலை அது.சொந்த தேசத்தில்,சொந்த மண்னில் எங்கே நாம் பிறரிடம் இருந்து அன்னியப்பட்டு விட்டோமோ,உரிமை இழந்துவிட்டோமோ என்ற பாதுகாப்பற்ற உணர்வின் வெளிப்பாடுதான் அதுவரை தாங்கள் உண்டு,தங்கள் வேலை உண்டு என்று அமைதியாக
வாழ்ந்து வந்த ஒரு சமூகம் வெளிப்படுத்தத் துவங்கிய வன்முறை முகம்.தேசப்பிரிவினைக்கு பின்னர் பாபர் மசூதி இடிப்புவரை இந்திய இஸ்லாமியர்கள் எங்கும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட சரித்திரம் இன்றுவரை இல்லை.அதுவும்கூட ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டது.அதாவது இவர்கள் ஒரு இடத்தில் குண்டு வைத்தால் இவர்கள் பேரைச் சொல்லி அவர்கள் மூன்று இடத்தில் குண்டு வைத்த கதையெல்லாம் இப்போது வெளிவருகின்றது.


அதேபோல  மதம்மாறி இஸ்லாமைப் பின்பற்றினாலும் கலாச்சாரத்தால் தங்கள் முந்தைய மதமான ஹிந்துக்களின் சம்பிரதாயங்களை இந்திய இஸ்லாமியர்கள் கடைபிடித்து வந்தனர்.திருமண வீடுகளில் மாவிலையும்,வாழைமரமும் கட்டுவது,பூப்புநீராட்டு நிகழ்ச்சி என்று எத்தனையோ சொல்லலாம்.இந்த மசூதி இடிப்பிற்குப் பின்னர் ஏற்பட்ட அந்நிய உணர்வு இஸ்லாமியர்களை கொஞ்சம் கொஞ்சமாக அந்த காலாச்சார நீரோட்டத்தில் இருந்து விலகி இஸ்லாம் தோன்றிய அரபு தேசத்தின் கலாச்சாரத்தையும் பின்பற்றும் போக்கு துவங்கியதும் மசூதி இடிப்பிற்குப் பின்னர்தான்.வகாபியிசம்,நஜாத் போன்ற அமைப்புகள் இஸ்லாமியர்களிடையே முக்கியத்துவம் பெறத் துவங்கிய இந்தக் காலகட்டத்திற்குப் பின்னர்தான். இப்படி பல விஷயங்களில் இந்திய இஸ்லாமிய சமூகத்தின் மனநிலையை மாற்றி சொந்த தேசத்திலேயே அந்நியப்பட வைத்து  புண்ணியம் தேடிக்கொண்டதைத் தவிர பா.ஜ.க,ஆர்.எஸ்.எஸ். வேறு ஒன்றும் சாதிக்கவில்லை.


ஆனால் இந்திய இஸ்லாமியர்கள் மொத்தமாக தேச உணர்வில் இருந்து அந்நியப்படவில்லை.கார்கில் போரின் போது நேரடி பங்களிப்பு,நிதிகளைக் குவித்தது என்று இந்த சமூகம் தேசத்தின் பின்னால் ஒட்டுமொத்தமாக நின்றது.கிரிக்கெட்டில் பாக்கிஸ்தான் வெல்ல வேண்டும் என்று நினைக்கும் என் நண்பன் நிஜாம் கார்கில் போரில் இந்தியா வெல்ல வேண்டும் தொழுகை நடத்தியது ஒவ்வோரு இந்திய இஸ்லாமியனின் ஆழ்மனதிலும் இந்த தேசத்தின் மீது உள்ள பிடிப்பைக் காட்டியது.கடந்த 18 ஆண்டுகளில் காலம் தடவிய மருந்தில் கசப்புணர்வுகள் குறைந்து மசூதி இடிப்பிற்குப் பின்னர் பிறந்த புதிய இஸ்லாமிய தலைமுறை தேச உணர்வோடு இருக்கின்றது.இந்தத் தீர்ப்பு அதை மீண்டும் கெடுத்துவிடுமோ என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நம்ம பதிவர் குசும்பன் அவருடைய நண்பரோட வட இந்திய டூர் போனபோது பல இடங்களில் கோவில்களும்,மசூதிகளும் அடுத்தடுத்து இருப்பதைக் கண்ட அவர் நண்பர் ”இந்த பாய்ங்க வேணும்னே எப்படி கட்டிருக்கனுங்க பாரு? என்றிருக்கின்றார்.
அதற்கு குசும்பன் “டேய், ஊருல அங்காளி பங்காளியா இருக்கும் பொழுது ஒரே சுவத்தை ஒட்டி இரண்டு வீடா கட்டிப்பாங்க, நம்ம மாமன் தானே நம்ம மச்சான் தானே என்று ஒன்னுமன்னா இருப்பாங்க..இரண்டு தலை முறைக்கு பிறகு அவுங்களோட பாசம் தெரியாது.வீட்டை ஒட்டி இருப்பதால் இவன் வீட்டு வாரி தண்ணி அவன் சுவத்துல விழுதுன்னு அடிச்சிப்பானுங்க...அதுமாதிரிதான் இதுவும் அப்ப எல்லாம் இரு மதத்தவரும் ஒன்னா ஒத்துமையா இருந்து எந்த பிரச்சினையும் இல்லாம சாமி கும்மிட்டு இருப்பானுவோ...இப்ப இந்த அரசியல்வாதிங்களால் தான் பிரச்சினை” என்றிருக்கின்றார்.எத்தனை சத்தியமான வார்த்தைகள்.

எனக்கு ஏதோ ஒரு நிலத்துக்கு உரிமையாளனாக இருப்பதைவிட என் பங்காளிக்கு சகோதரனாய் இருப்பதுதான் பெரிதாய்படுகின்றது.உங்களுக்கு???