நாளிதழ்களுடனான எனது நினைவு தினத்தந்தியுடனேதான் துவங்குகின்றது.காலையில் வீட்டிற்கு வரும் தினத்தந்திக்கான எனது காத்திருப்பு 28 வருடங்களாக இன்றும் தொடருகின்றது. கன்னித்தீவு ஏற்படுத்திய ஆர்வம்தான் இந்த நொடிவரை எனது வாசிப்பிற்கும்,கற்பனைக்குமான வித்தாக இருக்கிறது. வட இந்திய நடிகைகள் மட்டுமல்ல வடக்குபட்டி கோயிந்தசாமிக்குக்கூட தமிழை அறிமுகம் செய்வது இன்றும் தினத்தந்திதான்.
உலகில் எந்த ஒரு சிக்கலான விஷயமும் மொழி ஆளுமை கைகூடும்பட்சத்தில் சொல்வதற்கும்,புரிதலை ஏற்படுத்துவதற்கும் மிகவும் எளிதாகிவிடும்.அரை நூற்றாண்டு கடந்து இன்னமும் அதன் ஆசிரியர் குழுவினருக்கு அதில் வரட்சியே இல்லை என்பது பெரும் ஆச்சர்யம்.சக மனிதன் ஒருவன் திண்ணையில் அமர்ந்து தூணில் சாய்ந்து வெத்தலை,பாக்கு போட்டுக்கொண்டு நம்மோடு அரட்டை அடிக்கும் தொணி தினத்தந்தி நமக்குள் ஏற்படுத்தும் ஒரு சுகானுபவம்.
சமீப நாட்களாக தினத்தந்தியில் தலையங்கமும் வரத் துவங்கி இருக்கின்றது.செய்திகளை மட்டும் மக்கள்முன் வைத்துவிட்டு தன் கருத்துக்களை வெளியில் சொல்லாமல் இருந்துவந்த தினத்தந்தியின் பாணி இதன் மூலம் சற்றே மாறுகின்றது.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை விவசாயம்,தொழிற்சாலைகளின் உற்பத்தி,ஏற்றுமதி,இறக்குமதி வணிகம்,இயற்கை வளங்கள்,உட்கட்டமைப்பு,தங்கம் மற்றும் அன்னியச் செலாவணி கையிருப்பு,மக்கள்தொகை,சுகாதாரம்,கல்வி என்று எத்தனையோ காரணிகள் சேர்ந்துதான் நிர்ணயிக்கின்றன. நான் பொருளாதாரம் படித்தவன்.ஆனால் தினத்தந்தி போல எளிமையாக விளக்கத் தெரியாதவன்.இதற்கு மேலும் சொல்லிகொண்டு இருந்தால் போர் அடிக்கும்.போதும் நிறுத்திக்குவோம்.
தினத்தந்தி தலையங்கம் எழுதுவதை அதன் கால்நூற்றாண்டு வாசகனாய் பெரிதும் வரவேற்கின்றேன்.ஆனால் ஒரு செய்தியை அல்லது விஷயத்தைத் தலையங்கத்தில் தன் கருத்தாய் முன் வைக்கும்போது அதன் உண்மைநிலை சிறிதும் மாறாமல் இருப்பதை அந்தந்தத் துறை நிபுணர்களைக் கொண்டு பலமுறை உறுதிப்படுத்தி வெளியிட்டு விற்பனையில் இன்னும் பல நூற்றாண்டுகள் சரித்திரம் படைக்க தந்தியை வாழ்த்துகின்றேன்.
டிஸ்கி : நீண்ட நாட்களாக பதிவர் நாண்பர்கள் ஜெய்ஹிந்துபுரம்,சகோதரி நாஸியா,கேபிள் சங்கர்,முரளி கண்ணன்,தாமிரா மற்றும் சிலர் பொருளாதாரம் தொடர்பான பாடங்களை எளிய முறையில் தொடர்ந்து எழுதக் கேட்டனர். விரைவில் செய்கின்றேன்.
