தம்பியின் டைரிக் குறிப்புகள் (25/02/10)


எனக்கும் கிட்டத்தட்ட உங்க வயசுதான்.உங்களைப் பார்க்கையில் ரொம்பவே பொறாமையா இருக்கு...நம்பளும் இருக்கோமே ஒரு எளவும் சாதிக்காமன்னு.அதே நேரத்துல பெருமையாவும் இருக்கு...நானே சாதிச்ச மாதிரி.உங்களோட பெரிய பலமே நீங்க ஒவ்வொருமுறை சாதிக்கும்போதும் தானே சாதித்ததுபோல ஒவ்வொருவரும் நினைப்பதும்தான்.வாழ்த்துகள் சச்சின்.உங்களை எப்பத் தெரியுமா எனக்கு ரொம்பப்புடுச்சது?மும்பை இந்தியர்களுச் சொந்தம்னு சொன்னீங்கள்ல...கிரிக்கெட்டர் சச்சினைவிட இந்தியன் சச்சின் எனக்கு ரொம்பவே கிரேட்.

*******************************************************
இன்றைக்கு டுவிட்டரில் கார்க்கி “உன் உதிரம் போலே நான் உன்னுடலில் ஓடுவேன்ன்னு தோழியிடம் சொன்னது தப்பாபோச்சு.விரலை வெட்டிகொண்டு உன்னை பார்க்கனும்போல இருந்துச்சு என்கிறாள்” என்று ஒரு மெசேஜ் போட்டு இருந்தான். நான் அதற்குப் பதிலாக “நீ மட்டும்தான் லூசுன்னு நினைச்சேன்” என்று டுவிட்டினேன். அதற்கு  அந்தக் கழுதை “நாங்கள் காதல் பைத்தியங்கள்.உங்களிடம் காதல் மட்டும் மிஸ்சிங்” என்று பதில் போட்டு இருக்கின்றான். நான் ங்ஏஏஏஏஏஏ ஆகிட்டேன் :))

********************************************************

சென்னை மாநகரக் காவல் துறையின் இணைக் கமிஷ்னர் திரு.சக்திவேல்.ஐ.பி.எஸ்., அவர்களை அலுவல் நிமித்தமாகச் சந்திக்கச் சென்றேன். அவரைச் சந்திக்க வந்திருந்தவர்களில் பலரும் அவருக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள். தனக்கு நன்கு அறிமுகமான ஒருவர் தன்னிடம் உதவிகோரி வந்தால் ஒருவர் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி இருந்தது அவருடைய நடவடிக்கை.கனிவும்,கடுமையும் சரியான விகிதத்தில் கலந்த கலவையாக இருந்தார்.மக்கள் பணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சரியான உதாரணம் அவர்.ஹேட்ஸ் ஆஃப் சார்.

********************************************************

இன்றைக்கு செய்திகளில் பெரிதும் ஆக்கிரமிக்கும் பிரச்சனை நக்சல்களைப் பற்றியது.மத்திய,மாநில அரசுகள் உரிய முறையில் மக்களைக் கவனித்துக்கொண்டால் பின்னர் மக்கள் நக்ஸல்களைக் கவனித்துக் கொள்வார்கள்.ஒருவன் இருட்டான இடத்தில் தன் பொருளைத் தொலைத்துவிட்டு வெளிச்சம் இருக்கும் இடத்தில் போய் தேடினானாம்.அந்தக் கதைதான் நினைவிற்கு வருகின்றது.

********************************************************

நான் போகிறேன் மேலே..மேலே

பூலோகமே காலின் கீழே.

சமீபகாலமாக இந்தப் பாடல் என்னைச் சுற்றிச் சுற்றி அடிக்கின்றது. அன்றாடப் பணிகளின் மீது செலுத்தும் கவனத்தைக்கூட சிதறடிக்கின்றது.முக்கிய காரணம் என் ஆசான் எஸ்.பி.பி. 25 வயது இளைஞனுக்குப் பாடியிருக்கும் அந்த 65 வயது மனிதரின் குரலைக் கேட்டீர்களா??

சரி இப்ப என்னோட சேர்ந்து பாடுங்க.

நான் போகிறேன் மேலே..மேலே

பூலோகமே காலின் கீழே...

விண்மீன்களின் கூட்டம் என்மேலே


ஒ.கேவா. அப்படியே இப்ப நான் பாடுற இந்தப் பாட்டையும் சேர்ந்து பாடுங்க.

பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்

படர்கின்ற காதல் அதிசயம்..ஆ..ஆ..ஆ..

இப்படித்தான் நாங்க ஊரை ஏமாத்துவோம் :)))



********************************************************

பதிவர் அண்ணன் ஜீவ்ஸ் அவர்கள் மெயிலில் சில ஜோக்குகளை அனுப்பி இருந்தார்.அதில் என்னை மிகவும் கவர்ந்த ஜோக்ஸ் :)))

அ‌ப்பா‌வி நோயா‌ளி

டா‌க்ட‌ர் : உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா நீங்க ‌மீ‌ன்,

கோ‌ழி சா‌ப்‌பிடறதை ‌நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.

நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?

********************************************************

படித்ததில் பிடித்தது

போக்கு

வந்து விழுகிற

எல்லாக் கற்களும்

விழுந்த இடத்தில்

மூழ்கிக் கிடக்க

தன் போக்கில்

போய்க்கொண்டிருக்கின்றது நதி.

&&&&&&&&&

முரண்


நிஜமாயிருக்கிறேன்

முரணானவள் என்று

முகம் சுழிக்கின்றார்கள்.


- கவிஞர்.இளம்பிறை
********************************************************

அறிஞரின் தத்துவம்

கண்ணா! என்னதான் நம்ப மிட்நைட் மசாலா பார்த்து மகிழ்ச்சியா இருந்தாலும் எடுக்குற டைரக்டருக்கு எரிச்சலாத்தான் இருக்கும்.

ஒரு பூர்ஷ்வாவின் தன்னம்பிக்கையும், கம்யூனிஸ்ட்டின் கோழைத்தனமும்

ஒரிரு நாட்களுக்குமுன் மதியம் உணவிற்காக ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். அங்கே திரைப்பட நடிகை சகோதரி கனகா தனியே அமர்ந்திருந்தார். நீண்ட நாட்களுக்குப்பின் நேரில் பார்க்கும் வாய்ப்பு.இந்த இடைவெளியில் அவர் உருவத்தில் சிறிது மாற்றம் இருந்தது. சற்றே இளைத்திருக்கின்றார்.”எப்பவும் இந்த ஹோட்டலுக்கு வருவீங்களா?” என்று கேட்டதற்கு “எப்பவும் வரமாட்டேன்.பசிச்சா மட்டும்தான் வருவேன் என்று சொல்லிச் சிரித்தார்.கைகளில் அணிந்திருந்த வளையல்களைக் காட்டி இப்பல்லாம் இந்த மாடல்தான் ஃபேஷன் என்றார். இதையேன் ஒரு பெண்ணிடம் சொல்வதுபோல் என்னிடம் சொல்கின்றார் என்று நான் குழம்பிக்கொண்டு இருந்த நேரத்தில் ”ஆனா இந்த நகையெல்லாம் என் பாட்டியோடது.ஒல்ட் எல்லாம் இப்ப ஆண்டிக் என்று ஃபேஷனாகிவிட்டது” என்றார்.இப்போது நான் சிரிக்கத் துவங்கினேன். ஒரு அரைமணி நேரம் அவரோடு அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்ததில் ஒரு வார்த்தைகூட அவர் குடும்பத்தில் சமீபத்தில் சந்தித்துவரும் பிரச்சனைகளைப் பற்றி அவரும் பேசவில்லை.நானும் கேட்கவில்லை. பத்திரிக்கைகளில் வருவதுபோல அவர் மனக்குழப்பத்தில் இருப்பதாக எனக்கு எதுவும் தெரியவில்லை.மிகவும் தெளிவாகவே இருக்கின்றார்.



****************************************



தோழர்.வரதராசன் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போய், பின்னர் அவரது உடல் போரூர் ஏரியில் கைப்பற்றப்பட்டுள்ளது. தோழர்.வரதராசன் கடந்த ஓரிரு மாதங்களாகவே பெரும் மனக்குழப்பத்தில் இருந்ததாகவும் வீட்டிலும்,கட்சியிலும் அவருக்கு நிறைய மனக்காயங்கள் நேர்ந்ததாகவும் செய்திகள் வருகின்றன.அவரது நெருங்கிய தோழர்களிடத்தில் இதைப்பற்றி தொடர்ந்து அவர் பேசி வந்திருக்கின்றார். ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். மக்கள் கஷ்டங்களைத் தீர்க்க வேண்டியவர்.தன் கஷ்டம் தீர்க்கத் தெரியாமல் தவறான முடிவைத் தேடியுள்ளார்.தன் உடலை புதைக்காமல் மருத்துவ ஆராய்ச்சிக்கு அளிப்பதே இறுதி ஆசை என்று கூறியுள்ளார். ஆனால் அந்த இறுதி ஆசையும் நிறைவேறாது போல.காரணம் உடல் தண்ணீரில் மிகவும் ஊறிவிட்டதால் அந்த உடலை மருத்துவக்கல்லூரிகள் ஏற்பது கடினம் என்கின்றனர்.



****************************************



மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளில் முதல் நிகழ்வில் சம்மந்தப்பட்டவர் ஒரு சித்தாந்தவாதி அல்ல.பணமும்,பகட்டும்,போலி மரியாதைகளும் நிறைந்த திரையுலகைச் சேர்ந்தவர். தந்தையின் முகம் அறியாது வளர்ந்தவர்.தாயின் ஆதரவிலும்,பாசத்திலும் மட்டுமே வாழ்ந்தவர்.உலகம் அறியும்முன்னே ஹாலஜன் விளக்குகளின் வெளிச்சத்தில் குளித்து கேமிராமுன் நின்றவர்.ஒரே துணையான தாயையும் நடிக்க வந்த ஒரிரு வருடத்தில் இழந்தவர். சரியாக அமையாத மண வாழ்க்கை, சொத்தைக் குறி வைக்கும் பெற்ற தந்தை என்று அவர் தினமும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.அவரால் வாழ்வைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிகின்றது.ஆனால் சித்தாந்தத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர் பிரச்சனைகளில் இருந்து விடுபட மரணத்தைத் தேடுகின்றார். தோழர்.வரதராஜன் இறந்தது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. ஒரு கம்யூனிஸ்ட்காரன் தற்கொலை செய்து கொண்டதுதான் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

வராக நதிக்கரை ஓரம்

எழும்பூரில் கமிஷ்னர் ஆபிஸ் ரோடில் “கல்யாணபவன்” பிரியாணிக்கடைக்கு சைடாக ஒரு சிறு சந்தில் இருக்கின்றது அந்த தர்ஹா. நாளும்,கிழமையும் தற்போது மறந்து போன அந்த நாளில் நான் உள்ளே நுழையும் போது வெளியே வந்த அவரைப் பார்த்தேன்.எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசிப்பதற்குள் சட்டென்று கடந்து சென்றார் இரண்டு படங்களுக்கு இசையமைத்து இருந்த ’’இசைப்புயல்” ஜனாப்.ஏ.ஆர்.ரஹ்மான்.இன்றைய ரஹ்மானின் உச்சத்தை மட்டுமே அறிந்தவர்களுக்கு நான் சொல்வது சற்றுக் காமெடியாகவே இருக்கும்.ஆனால் அன்றைய நிலையில் சற்று யோசித்து சுதாரித்துத்தான் அவரை அடையாளம் காணவேண்டி இருந்தது.


அவர் அறிமுகமான காலகட்டத்தில் நான் தீவிர ராஜா விசிறி(இப்ப மட்டும் என்ன?!??). இளையராஜா உயிரோடு இருக்கும்வரை அவர்தான் என்றும் தமிழ் திரையுலகில் நம்பர் ஒன்னாக இருப்பார் என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருந்த காலம். என் கண்முன்னே ராஜாவின் ராஜாங்கம் ஆட்டம் காணத்துவங்கியதில் ராஜாவைவிட எனக்குப் பெரும் அதிர்ச்சி.அன்றைக்குப் பதின்ம வயதுகளில் இருந்த பலரும் என்னைப்போலவேதான் இருந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.





ரோஜாவில் அறிமுகமாகி புதியமுகம்,திருடாதிருடா,உழவன் என்று பாடல்களை ஹிட் செய்தாலும் ரஹ்மான் பதின்ம இளைஞர்களின் மனதை ஆக்கிரமிக்கத் துவங்கியது ஜெண்டில்மேனில்தான். காதலனில் அவர் கிளப்பிய இசைப்புயல் ஊரையே சுழற்றி அடித்தது. டாக்டர் ஆல்பனின் சில இசைக்கோர்வைகளைப் பயன்படுத்தி இளைஞர்களைப் படுத்தாப்பாடு படுத்தினார். அடுத்து பம்பாயில் கண்ணாளனேவில் கவாலியை அவர் கையாண்ட விதம்...அன்றே உலகத்தரம். வராகநதிக்கரை ஓரம் பற்றிச் சொல்வதானால் சொல்லிக்கொண்டே போகலாம்.


இதற்கிடையில் படம் ஓடுகின்றவரைதான் அவர் பாடல்களை இரசிக்கமுடிகின்றது... பாடல்கள் ஹிட்டானாலும் பிண்ணனியில் சொதப்புகின்றார்....மிகுந்த நேரம் எடுத்துக்கொள்கின்றார் என்று பல குற்றச்சாட்டுகள் அவரை புயல்போல் சூழ்ந்தன. இருப்பினும் அசையவில்லை இந்த கலங்கரை விளக்கம். ஒரு மனிதன் அமைதியாய் தன்னுடைய வேலையை மட்டும் மிகச் சரியாக செய்து கொண்டிருந்தால் என்ன பலன் என்பதற்கு, சுருங்கச் சொன்னால் ”கடமையைச் செய்” என்ற கீதையின் வார்த்தைக்கு இந்த இஸ்லாமியரே சாட்சி. மாஷா அல்லாஹ். 


பழைய படம் ஒன்றில் கவுண்டமணி பாடகராக முயற்சி செய்து கொண்டு இருப்பார். ஏதேனும் டார்ச்சர் நிகழும்போது ”நா எங்க எப்படி இருக்க வேண்டியவன்??” என்று பீல் செய்வார்.பிண்ணனியில் இளையராஜா கை அசைக்க கவுண்டர் ஹெட்போனோடு பாடிக்கொண்டு இருப்பார். அதே கனவு எனக்கும் அலுவலகத்தில் வீணாய்போன கணிணியின் டெபிட்,கிரெடிட்டுக்கு மத்தியில் வரும். கவுண்டருக்கு பதிலாய் நானும், ராசாவுக்கு பதிலாய் ரஹ்மானும். பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் :)