1949 ஆம் வருடத்தின் எதோ ஒருநாள். சட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பதிவு செய்து கொண்ட அந்த இளைஞன் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நுழைகின்றான். நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஒய்வு அறையின் ஒரு மூலையில் உள்ள தண்ணீர் பானையில் தண்ணீரை எடுத்து குடிக்கத் துவங்குகின்றான்.
“டேய்!நிறுத்து”
“என்ன சார்?”
“அந்த தண்ணிய குடிக்கக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா?”
”ஏன் சார்?”
“நீ புதுசா வந்துருக்குறியா?”
”ஆமாம் சார்”
“இது எங்கள மாதிரி உயர்சாதிக்காரர்கள் மட்டும் குடிப்பதற்காக உள்ள பானை. நீ புதுசுங்குறதால இந்தத் தடவை பரவாயில்லை.இனிமே இதுல தண்ணி எடுத்துக் குடிக்காதே..புரியுதா?”
கண்டிப்பான குரலில் சொல்ல்கின்றார் அந்த உயர்சாதி வக்கீல்.
அவரை உற்று நோக்கிய அந்த இளைஞன் சொல்கின்றான், ”இது பொது இடம்.உங்களுக்கெல்லாம் அப்படி அவசியம் எனில் நீங்கள் வீட்டில் இருந்து கூஜாவில் தண்ணீர் எடுத்து வாருங்கள்.இங்கு குடிக்காதே என்று சொல்ல உங்கள் யாருக்கும் உரிமை இல்லை ”
”என்னடா வாய் ரொம்ப நீளுது”
“தண்ணீர் குடிக்காதே என்று மட்டுமல்ல...என்னை “டா” போட்டு அழைக்கவும் உங்களுக்கு உரிமையில்லை”
“அப்படித்தாண்டா சொல்வேன்”
அவர் அப்படி சொன்ன அடுத்த வினாடி தண்ணீர் பானையை எடுத்து அவர் தலையில் போட்டு உடைத்து அந்த இளைஞன் சொன்னான் “ என்னை அந்த பானையின் தண்ணீர் எடுக்காதே என்று சொல்லும் எவனையும் இப்படித்தாண்டா செய்வேன்”
சக வக்கீலைத் தாக்கிய குற்றத்திற்காகவும், நீதி மன்றத்தின் உள்ளே ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும் 15 நாள் சிறை தண்டனையும், மூன்று மாதம் வழக்குகளில் வாதாடத்தடையும் விதிக்கப்படுகின்றது. அதுநாள்வரை இந்தப்பாகுபாட்டை ஏற்றுக்கொண்டிருந்த பிற வக்கீல்கள் உணர்வு பெற்றவர்களாய் பெரும் போராட்டத்தில் இறங்க அந்த இளம் வக்கீல் இரண்டே நாட்களில் விடுதலை ஆகின்றார்.
சிறையில் இருந்து விடுதலைபெற்ற பின்னர் கோர்ட் ஹாலின் உள்ளே செல்கின்றார். அன்றைய நாட்களில் நீதியரசரின் முன்னே இருபுறமும் இருக்கும் வக்கீல்கள் இருக்கையில் முதலில் உயர் வகுப்பினரும் பின்னர் வரிசைப்படி மற்ற சாதி வக்கீல்களும் அமர்ந்திருக்கும் முறை இருந்தது. இதுகண்ட அந்த இளம் வக்கீல் மறுநாள் வெகுசீக்கிரமாகவே வந்து முதல் இருக்கையில் அமர்ந்து விட்டார். உயர்சாதி வக்கீல்கள் அவர் அமர்ந்து இருப்பதைக் கண்டு பெரும் பிரச்சனையைக் கிளப்புகின்றனர். எதையும் கண்டு கொள்ளாது அந்த இருக்கையில் இருந்து எழ மறுத்து அசையாது அமர்ந்துவிட்டார் அவர்.
பிரச்சனை பெரிதாவதைக் கண்ட நீதிபதி அவரிடம் “தம்பி! நீ எங்கு அமர்ந்தால் என்ன? இருக்கையில் என்ன இருக்கின்றது? நீ பின்னால் போய் அமர்ந்தால்தான் என்ன?” என்று வினவுகின்றார்.
“மைலார்ட்! உங்கள் கருத்துப்படி இருக்கையில் ஒன்றுமில்லை...அப்படித்தானே?’
“ஆமாப்பா”
“அப்படியானால் நாளைமுதல் நான் உங்கள் இருக்கையில் அமர்ந்து கொள்கின்றேன்..நீங்களே சொல்லிவிட்டீர்களே”
என்ன சொல்வது என்று புரியாத நீதியரசர் இனிமேல் முதலில் வருபவர்கள் இருக்கை காலியாக இருக்கும் முறைப்படி அமர்ந்து கொள்ளுங்கள் என்று தீர்பளிக்கின்றார்.
அந்த இளம் வக்கீல் என்னுடைய மாமா புதுகை நகர மக்களால் அன்போடு பி.எஸ்.பி என்று அழைக்கப்படும் பி.எஸ்.பக்கீர் முகமது அவர்கள்.
குன்றக்குடி அடிகளார் அவர்களால் துவங்கப்பட்ட திருவருள் கழகம் அமைப்பின் தீவிர உறுப்பினர். தமிழகத்தில் எங்கெல்லாம் ஜாதி,மதக் கலவரங்கள் நடக்கின்றதோ அங்கெல்லாம் திருவருள் கழகத்தின் சார்பாகச் சென்று அமைதியை நிலைநாட்டுவதை தன்னுடைய வாழ்நாள் பணியாகக் கொண்டவர். 5 வேளை தவறாமல் தொழுகும் இஸ்லாமியராய் அனைத்து மதத்தவரையும் பாகுபாடின்றி நேசிப்பவர். புதுக்கோட்டை வக்கீல்கள் சங்கத்தின் தலைவராய் கால் நூற்றாண்டுக்கும்மேல் பணிபுரிந்தவர்.
சமூகநீதியையும்,மத நல்லிணக்கத்தையும் தனது இருகண்களாய் கொண்டு வாழ்ந்த அந்த கிழட்டுச் சிங்கம் தன்னுடைய 83 ஆம் வயதில். நேற்று உலகை வாழ்வை விடுத்து மறுவாழ்வு சென்றடைந்து விட்டது. இறைவனின் அவையில் அவர் நற்கூலிபெற பிராத்திக்குமாறு அனைவரையும் வேண்டுகின்றேன்.